Soil related hazards and its management | Kothari Group

மண் சார்ந்த இடர்பாடுகளும் அதன் மேலாண்மையும்

Date: 08-01-2024

உவர் தன்மையுடைய மண்

  • இந்த மண்ணில் அதிகளவு நீரில் கரையும் உப்புக்கள் இருப்பதால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்டும்.
  • இந்த மண்ணில் மின்கடத்தும் திறன் 4 dsm-1, இதற்காக முக்கிய மற்றும் பக்கவாட்டு கால்வாய்களை 60 செ.மீ ஆழமாகவும், 45 செ.மீ அகலமாகவும் உள்ளவாறு அமைத்து, மண்ணில் உப்புக்களை வழிந்தோடச் செய்ய வேண்டும்.
  • தொழுவுரம் 5 டன் /எக்டர் என்ற அளவில் நடவு செய்யும் 10-15 நாட்கள் முன்னரும், தோட்டப்பயிர்களில் விதைப்பதற்கு முன் மண்ணில் இடவேண்டும்

களர் மண்

களர் மண்ணில் அதிகளவு சோடியம் உப்பகளுடன், சோடியத்தின் சதவீதம் 15-க்கும் அதிகமாகவும், அமிலகாரத்தன்மை 8.5 ஆகவும் இருக்கும்

நிவர்த்தி

  • தகுந்த ஈரம் மண்ணில் இருக்கும் போது உழ வேண்டும்.
  • ஜிப்சம் தேவையைப் பொறுத்து, ஜிப்சம் மண்ணில் இட வேண்டும்.
  • நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வடிகால் வசதி ஏற்படுத்துவதால் கரையும் உப்புக்கள் வழிந்தோடிவிடும்.
  • பசுந்தாள் உரம் 15 டன் /எக்டர் என்ற அளவில் மண்ணில் கலந்து உழுது விட வேண்டும்.

அமில மண்

  • அமில மண்ணில் அமிலக் காரத் தன்மை 6 க்கு குறைவாக இருக்கும், ஹைட்ரஜன், அலுமினியம் அதிகளவில் இருப்பதால் மணிச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மக்னீசியம், மாலிப்டினம் மற்றும் போரான் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது
  • தேவைப்படும் சுண்ணாம்பை பரிந்துரைக்கப்பட்டபடி நிலத்தில் இட்டு, உழுதுவிடவேண்டும்.
  • இதை நிவர்த்தி செய்ய மாற்று பொருட்கள் – டோலமைட், மரத்தாள், மரக்கூழ் அரவைமில்லிலிருந்து வரும் சுண்ணாம்பு, சுண்ணாம்புக் கல் போன்றவை பயன்படுத்தலாம்.

இரும்பு மற்றும் அலுமினிய நச்சுத் தன்மை

அதிக, செறிவுடன் இரும்பு மற்றும் அலுமினியம், குறிப்பாக நீர் தேங்கிய மண்களில் காணப்படும்.

  • தேவைப்படும் அளவு சுண்ணாம்பை + பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி, சாம்பல் சத்துடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.
  • அங்கக எருவை மண்ணில் இடலாம்
    மணல் சார்ந்த மண்
  • இதில் அதிகளவில் மணல் இருப்பதால் நீர் அதிகளவில் வழிந்தோடும். ஊட்டசத்துகளும் மண்ணில் நிற்காமல் வழிந்தோடி விடும். 400 கிலோ எடையுள்ள கல் உருளை (அ) எண்ணெய் தொட்டியில் 8 மடங்கு கற்கள் நிரப்பி, மூன்று வருடத்திற்கு ஒரு முறை, தகுந்த ஈரப்பதம் இருக்கும் நிலையில் உருட்ட வேண்டும். ஏரி வண்டலை கடற்கரையோர மணல் கலந்த மண்ணில் இடுவதால் அதன் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தலாம்.
  • கடினமான மேற்பரப்புள்ள மண்
  • கடினமான மேற்பரப்பு செம்மண்களில் 15 செ.மீ ஆழத்திற்கு கீழே வரை இருக்கும் களிமண் மற்றும் இரும்பு ஆக்ஸைடுகள் மேல் தட்டில் படிந்து விடுவதால், வேர்கள் உள்நோக்கி வளர முடியாது.
  • நிவர்த்தி
  • உளிக்கலப்பை கொண்டு 0.5 மீ. இடைவெளிவிட்டு ஒரு பக்கமும், பின் அதற்கு நேர்மாறாகவும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை உழ வேண்டும். தொழுஉரம் (அ) மட்கிய தென்னை நார்க் கழிவு ஒரு எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் மண்ணில் இட்டு உழவேண்டும்.

மேற்பரப்பு கடினமாக உள்ள மண்

மோசமான மண் அமைப்பு கொண்ட மண்ணின் மேற்பரப்பில் மழைத்துளிபடும்போது இறுகி, மேற்பரப்பு கடினமாகிவிடும். களிமண் கொண்ட மேற்பரப்பினால் நாற்றுக்கள் வெளிவர முடிவதில்லை.

  • மண்ணின் மேற்பரப்பில் உருவாகும் கடினத்தன்மையை கொத்துக் கலப்பை (அ) சிறுகலப்பை (அ) பலுகு கொண்டு மண்ணைக் கிளறிவிட வேண்டும்.
  • சுண்ணாம்பு (அ) ஜிப்சம் 2 டன் /எக்டர் மற்றும் தொழுஉரம் 12.5 டன் / எக்டர் என்ற அளவில் இட வேண்டும்.
  • அறுவடை செய்த பின் உள்ள பயிர்க்குப்பைகளை அப்படியே மண்ணில் மட்க விட வேண்டும்.

கடினத் தன்மையுள்ள களிமண்

களிமண்ணில் அதிகளவு களிமண் துகள்கள் இருப்பதால் மண்ணில் நீர் உள்ளே புகாமல், அளிக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அங்கேயே தங்கிவிடுகிறது.

  • ஆற்று மணல் ஒரு எக்டருக்கு 100 டன் என்ற அளவில் இட வேண்டும்.
  • இறக்கை கலப்பை (அ) வட்டக் கலப்பை கொண்டு கோடைக் காலங்களில் ஆழமாக உழவு செய்ய வேண்டும்.

குறைவாக நீர் உட்புகும் கருப்பு மண்

  • செம்மண் கலந்த இரும்பொறை மண் 100 வண்டி இட வேண்டும்.
  • இறக்கை கலப்பை (அ) வட்டக் கலப்பைக் கொண்டு கோடைக் காலங்களில் ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
  • தொழஉரம், மட்கிய தென்னை நார்க் கழிவு (அ) ஆலைக் கழிவு ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் இடுவதால் மண்ணின் இயல் தன்மையும், நீர் உள்ளே வடியும் தன்மையும் மேம்படுத்துகிறது.

அதிகளவு நீர் உட்புகும் செம்மண்

  • ஏரி வண்டல் (அ) கருப்பு மண் ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவிலும், தொழு உரம், மட்கிய தென்னை நார்க் கழிவு (அ) ஆலைக்கழிவு 25 டன் / எக்டர் என்ற அளவிலும் கலந்து இட வேண்டும்.
  • இறக்கைக் கலப்பை (அ) வட்டக் கலப்பை கொண்டு கோடைக் காலங்களில் ஆழ உழவு செய்ய வேண்டும்.

உளிக் கலப்பைக்கான செயல் முறைகள்

மண்ணிற்கு சற்று கீழே வரை கடினமாதல் பெரும்பாலான மண்களில் காணப்படுகிறது. இதனால் பயிர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்காமலும் விளைச்சல் குறையும். இந்த மண்ணால் நீர் மண்ணின் உள்ளே செல்லுவது தடைபடும். காற்று மற்றும் ஊட்டச் சத்துக்கள் பயிர்களுக்கு கிடைப்பதும் தடைபடும். இந்த மாதிரி மண் தமிழ்நாட்டில் கோயமுத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருச்சி, மதுரை மற்றும் சேலம் மாவட்டங்களில் மானாவாரி சாகுபடியில் உ்ளள 3.8 எக்டர் நிலப்பரப்பில் காணப்படுகிறது.

தொழில்நுட்பம்

நிலத்தை உளிக்கலப்பை கொண்ட 50 செ.மீ இடைவெளி விட்டு இரண்டு திசைகளிலும் குறுக்கு வாட்டில் மற்றும் நீளவாக்கிலும் உழவேண்டும். உளிக்கலப்பையானது கடினமான இரும்பு கலப்பை கொண்டது. இது 45 செ.மீ ஆழம் வரை மண்ணில் சென்று, மண்ணின் கடினத்தட்டை உடைக்கும். இது பொதுவாக டிராக்டர் மூலம் இயக்கப்படும்.

• 12.5 டன் /எக்டர் தொழுஉரம் /ஆலைக்கழிவு/ மட்கிய தென்னை நார்க் கழிவு மண்ணின் மேற்பரப்பில் சரிசமமாக பரப்ப வேண்டும்.

water-management

- செ.தினகரன்.Msc Agri. Agronomy,
முதுநிலை உழவியல் மேலாளர்,
கோத்தாரி அக்ரி டெக் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு